Sunday 7 September 2014

நாம் தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி -- 7



புத்தகப்புழுக்களாக தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்;நான்குபேர் இருக்கும் இடத்தில் தமது மேதாவித்தனத்தைக் காட்டிட பல நூல்களில் இருந்து மேற்கோள் காட்டுவர்;தினசரி செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் கூட(ஆன்லைனிலும் தான்!) இல்லாதவர்களுக்கு அவர்களுடைய மேற்கோள்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்;அவர் சொல்லும் புத்தகத்தின் மீதோ அல்லது அந்தப் புத்தகத்தை எழுதியவர் மீதோ அல்ல;அதைச் சொல்லும் அந்த ‘புத்தகப் புழுவின்’ மீது! இது போதாதா? அந்த புத்தகப்புழு இந்த அப்பாவியை ஏமாற்றிட. .

 முகநூலில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கும் இதே சுபாவம் இருக்கிறது.எச்சரிக்கை அப்பாவிகளே!!!

புத்தக அறிவை விடவும்,அனுபவ அறிவே நமக்குத் தேவையான அனைத்தையும் தரும்;அனுபவ அறிவு பெற்றவர்கள் பெரும்பாலும் நேரடியாகத்தான் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பார்களே தவிர,எழுத்தில் தமது அனுபவங்களை வெளியிடுவதில்லை;அப்படியே வெளியிட்டாலும் அந்த வெளியீடு முழுமையானதாக இராது.எனவே,உங்கள் பிரச்னை தீர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நேரடியாகச் சந்திப்பதே நன்று.யாரை? ஜோதிடம் பார்ப்பவர்களையும்,அருள்வாக்கு சொல்பவர்களையும்.

ஒரு அனுபவம் மிக்க ஜோதிடரை நீங்கள் நேரடியாக சந்தித்தப் பிறகு உங்கள் வாழ்க்கையே அடியோடு மாறிவிடும்.ஏனெனில்,நீங்கள் வெகுதூரத்தில் இருந்து அவரை சந்திக்க வருவதால்,அவரை நீங்கள் மதிப்பதாக அர்த்தம்.அவ்வளவு தூரம் வருவதால்,நீங்கள் களைத்துப் போயிருப்பீர்கள்.எனவே,உங்களுக்கு ஜோதிடப் பலன்களை அந்த ஜோதிடர் பூடகமாக புரியாத தமிழில் சொல்வது கிடையாது;நேரடியாகவும்,விளக்கமாகவும் சொல்வதால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உடனடியாகவும்,தீர்க்கமாகவும் முடிவெடுக்க அவரது ஜோதிட கணிப்பு காரணமாக இருக்கும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருமே எல்லா துறையிலும் எக்ஸ்பர்ட் கிடையாது;ஓரிரு துறைகளில் மட்டுமே ஒருவர் எக்ஸ்பர்ட்டாக இருப்பார்;இவ்வாறு மனிதனை இறைவன் படைத்தமைக்குக் காரணம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு செயலில் இறங்கும் முன்பு நீங்கள் அந்த செயலை தொழிலாகக் கொண்டவர்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு செயல்பட ஆரம்பிப்பது நன்று.ஆனால்,நமது தமிழ்நாட்டில் அப்படி கேட்பதற்குக் கூச்சப்படுபவர்களே அதிகம்.அப்படி கேட்பதால் நம்மை அப்பாவி என்றோ இது கூடவா தெரியவில்லை? என்று கேட்டுவிடுவார்களோ என்றோ நினைப்பவர்களே அதிகம்.இந்த நினைப்பால் ஏற்படும் பிரச்னைகளும்,இழப்புகளும் மிக அதிகம்.


கொஞ்சம் ஜோதிடம்,25 வருட ஜோதிட அனுபவம் + கணிப்பொறி பற்றிய அடிப்படை அறிவு + இணையத்தை தொடர்ந்து பயன்படுத்தும் சுபாவம் + புதிய புதிய மென்பொருட்களை அறிந்து கொண்டும்,அதைப் பயன்படுத்திப்பார்க்கும் பொறுப்புணர்ச்சி + எழுத்தாற்றல் + ஆங்கில அறிவு போன்றவைகளாலும்,தகுந்த ஆன்மீக குருவின் அருளாலும் இந்த ஆன்மீகக்கடல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இதில் அனுபவ உண்மைகளே அதிகம் எழுதப்படுவதால் பலருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக இருக்கிறது.

பலர் ஏழரைச்சனி நடைபெறும் போதுதான் சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கையிருப்பு சேமிப்பையும்,மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் சொந்தத் தொழில் செய்யத் துவங்குவர்.அவர்களில் பலர் எந்தத் தொழில் செய்ய துவங்குகிறார்களோ அதில் அடிப்படை அறிவு கூட இல்லாமல் துவங்கி,கடனாளியாகி மனைவியிடமும்,பெற்றோரிடமும் கெட்டபெயர் வாங்கி தனிமையோடும்,அவமானத்தோடும் வாழத் துவங்கிவிடுகின்றனர்.
சிலர்  குறைந்தது மூன்று வருடம் வரை வேலை பார்த்த அனுபவத்தில் அதே தொழிலுக்கு வருகின்றனர்.அவர்களுக்கு பணத்தை நிர்வாகம் செய்யத் தெரிவதில்லை;அதனாலேயே அவர்களின் தொழில் கடனால் மூழ்கி விடுகிறது.இது பற்றிய அனுபவத்தை பள்ளியிலோ கல்லூரியிலோ சொல்லித்தருவதில்லை;இதற்குரிய பாடத்திட்டம் இந்தியாவிலேயே இல்லை;
ஒருவர் சனி மஹாதிசை புதன் புக்தி இராகு அந்தரத்தில் இயற்கையான முறையில் இறந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்;அவர் மறு ஜன்மம் எடுக்கும் போது சனி மஹாதிசை புதன் புக்தி இராகு அந்தரத்தில் மீதி இருக்கும் காலக் கணக்கின்படியே பிறப்பார்.இதையே விட்டகுறை=தொட்ட குறை என்று நமது தமிழ் முன்னோர்கள் பழமொழியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அவ்வாறு இறந்த நாளில் இருந்து 16 நாட்கள் வரையிலும் அந்த உயிர் இறந்த இடத்திலேயே இருக்கும்;தனது உடலுக்குள் நுழைய மீண்டும் முயற்சிக்கும்;தனது குடும்பத்தாரை நினைத்தும்,தனது குழந்தைகளை நினைத்தும் அழும்;இந்த நிலையில்,இறந்தவரின் மகன்/ள்களில் யாருக்காவது மன வலிமை இல்லாவிட்டால் அவர்களுக்கு இந்த 16 நாட்களுக்குள் உடல் நலம் குன்றி அவர்களில் ஒருவர் அல்லது இருவர் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்கள் மூன்று நாட்களில் அடுத்தடுத்து இயற்கையாகவே மரணமடைந்தார்கள்.இது தொடர்பாக ஒரு வருடம் கழித்து விசாரிக்கையில் அந்த மூன்று பெண்களுமே ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த பாசத்தோடும்,அக்கறையோடும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இறந்த 17 ஆம் நாளன்று அந்த ஆத்மாவானது தனது மேலுகப் பயணத்தைத் துவங்கும்;ஒருவருடம் வரை பயணித்து,வானில் நாம் பார்க்கும் கன்னிராசி மண்டலத்தை சூட்சுமமாகச் சென்றடையும்.(இதை இன்றைய ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் நவீனக் கருவிகளால் நிரூபித்துள்ளனர்)அங்கே இவர்களின் பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு மேலுலகம் அல்லது கீழுலகம் சென்று அதற்குரிய பலன்களை அனுபவிக்க வேண்டும்.

நிறைய புண்ணியம் செய்திருந்தால்(அல்லது முடிந்தவரையிலும் பாவம் செய்யாமல் தான் உண்டு;தனது வேலை உண்டு என்று இருந்தாலே) சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்;
மனிதனாக வாழ்ந்த காலத்தில் ஆடாத ஆட்டம் ஆடியிருந்தால் கீழுலகம் சென்று படாத பாடு பட வேண்டியிருக்கும்(அந்நியன் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயமும் உண்மையே! கலிகாலமாக இருப்பதால் இதை நம்பாதவர்களே அதிகம்).கலியுகமாக இருந்தாலும்,இந்தக் கணக்கு மாறாது.குறிப்பிட்ட காலம் இவ்வாறு சுகங்கள் அல்லது வேதனைகளை அனுபவித்துவிட்டு,மீண்டும் கர்மபூமி எனப்படும் இந்த பூமிக்கே வந்து பிறக்க வேண்டும்.



திருந்திய மனித ஆத்மாக்கள் இப்பிறவியில் தனது மனைவியை/கணவனைத் தவிர வேறு எந்த துணையிடமும் காமவலையில் சிக்காமல் வாழ்ந்து வருவார்கள்.யாருக்கு எதிராகவும் அரசியல் செய்ய மாட்டார்கள்;யாரையும் மனதால் கூட நோகடிக்க மாட்டார்கள்;வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் எண்ணம் சிறிதும் வராது.பிறருடைய தவறுகளை தாமே தாங்கிக் கொள்வார்கள்.இவர்களின் ஆன்மீக நோக்கங்கள் பரமரகசியமாக இருக்கும்.
உலகமயமாக்கல்,தாரளமயமாக்கல்,WTO =World Trade Organisation என்ற அமைப்பில் இந்தியா உறுப்பினராக 1.1.1995 அன்று சேர்ந்ததால்,இன்று பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற மனோபாவம் இந்தியா முழுவதும் பரவி விட்டது;இதனால்,கோடிக்கணக்கான இந்துக்குடும்பங்கள் ஒழுக்கமாக வாழ முடியாமல் திணறி வருகின்றன;சேமிக்கவே முடியாமல் தவித்து வருகின்றன;ஒவ்வொரு வேளை உணவுக்காகவும் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றன;

உலகமயமாக்கல் என்பது அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு தந்திரமான வக்கிர ஒப்பந்தம்.இந்த ஒப்பந்தத்தால் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள்;ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக மாறி வருகின்றனர்; உள்நாட்டு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன;இதனால்,பல கோடி பேர்கள் வேலையிழந்து வேறு வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்;வேலை கிடைக்காதவர்கள் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்தால் என்ன செய்வார்கள்?


 உலகில் இருக்கும் 220 நாடுகளில் 195 நாடுகள் உலகமயமாக்கல் என்ற காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும்,இதையும் மீறி தனது நாட்டு மக்களின் நலனைக் காப்பதில் ஒவ்வொரு நாடும் கண்ணும் கருத்துமாக தனது ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளையும் வகுத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இந்தியாவில் மட்டும் அப்படி அல்ல;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பெரும்பாலான குடும்பங்கள் ஏதாவது ஒரு வகையில் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.இதற்கு முதல் காரணம் அவர்களின் அப்பா அல்லது அம்மா வழிமுன்னோர்கள் தற்கொலை அல்லது கொலை செய்யப்பட்டிருப்பதே!
அவ்வாறு செயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது;சொர்க்கம்,நரகம் கிடையாது.ஆவியாக 40 முதல் 200 வருடங்கள் வரை பசியோடும்,பட்டினியோடும் அலைவதால் அவர்கள் ஆக்ரோஷப்பட்டு தமது வம்சாவளியினரின் நிம்மதியைக் கெடுத்து வருகின்றன.செயற்கையான முறையில் இறந்த ஆத்மாக்கள் அனைத்துமே பிரேதாத்மாக்கள் என்றே அழைக்கப்படுகின்றன.அவைகளுக்கு சாந்தி செய்து ஒளி மண்டலத்துக்கு அனுப்புவது ஒவ்வொரு தமிழர்களின்/இந்துக்களின்/மனிதர்களின் கடமை ஆகும்.இப்படி அனுப்பாத குடும்பங்களே இன்று கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்துக் கொண்டு அந்த சொத்துக்களுக்காக கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன.அல்லது ஏதாவது ஒருசில காரணங்களால் பூர்வீகச் சொத்துக்கள் பகிர்ந்து தரமுடியாமல் அவதிப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.


இணையத்தின் பரவல்,செல்போன்களின் அறிமுகம்,தொலைக்காட்சித் தொடர்களின் அணிவகுப்பு,சாஃப்ட்வேர் நிறுவனங்களால் மிகச் சிறந்த சம்பளம் என்று நமது தமிழ்நாடு முன்னேறினாலும்,இந்த முன்னேற்றம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் முன்னேற்றம் அல்ல;தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் வெறும் பத்து சதவீதம் இருந்தால் அதுவே அதிகம்.ஐரோப்பிய,அமெரிக்க நிறுவனங்கள் திறமையான பணியாளர்களுக்காக இங்கே கடைவிரித்துள்ளது;அவ்வளவே! எந்த நிமிடத்திலும் வேலையை காலி செய்யும் திறம் படைத்தவை இவை! இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்படும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதுவும் கூட இறந்த முன்னோர்களின் கோபத்தின் காரணம் என்று சொல்லலாம்.இதை அனுபவிப்பவர்களால் மட்டுமே விவரிக்க முடியும்.மற்றவர்கள் வேடிக்கையாக கிண்டல் செய்துவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுவார்கள்.
இறைவன் படைத்த பிறவிகளில் மிக மிக மிக உயர்ந்த பிறவி மனிதப் பிறவியே! இறைவன் படைத்த பிறவிகளில் மிக மிக மிக இழிவான பிறவியும் மனிதப் பிறவியே! எந்த ஒரு மனிதன் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மந்திர ஜபத்தைப் பின்பற்றவில்லையோ அல்லது ஏதாவது ஒரு இறை வழிபாட்டைச் செய்யவில்லையோ அந்த மனிதப்பிறவி இழிவான பிறவியே!!


கலியுகத்தில் தான் நமது கர்மவினைகளை மிகவும் சுலபமாகக் கரைக்க முடியும்.தினமும்  ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்பதை எழுதிக்கொண்டு வந்தாலோ அல்லது அட்டவீரட்டானங்கள் அனைத்திற்கும் ஒருமுறை பயணம் செய்தாலோ அல்லது திருவாதிரை நட்சத்திரநாளன்று அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் சென்றாலோ அல்லது ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீகால பைரவ/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ அபிஷேகத்தில் கலந்து கொண்டாலோ அந்த மனிதப் பிறவியே மிக மிக மிக உயர்ந்த பிறவி ஆகும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment