Sunday 12 October 2014

வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே!



வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே!  உன்னை
தேனான சொல்லெடுத்து செவி குளிரப் போற்றுகின்றேன்!
காணாத இன்பம் யாவும் காண நீ வழி வகுப்பாய்!
மீனமும் தனுசும் உந்தன் மேலான வீட தாகும்!

பொன்னிற முல்லையோடு புஷ்ப ராகத்தை ஏற்றாய்!
வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய்! மரத்தினில் அரசை ஏற்றாய்!
எண்ணத்தில் நிற்கும் தேவா! எளிதினில் வெற்றி தாராய்!
மண்ணினில் பதினாறாண்டை மறவாமல் நீயும் ஏற்றாய்!

சுண்டல் நைவேத்யத்தால் தொல்லைகள் தீர்ப்பவன் நீ
கொண்டதோர் யானை உந்தன் கொண்டாடும் வாகனம் தான்!
தந்திடும் பதவி வாய்ப்பும் தடையில்லாக் காரிய சிறப்பும்
வந்திடும் பிள்ளைப் பேறும் வழங்குதல் உன் பொறுப்பே!

பொருளொடு புகழைத் தந்து போற்றிடும் வாழ்வைத் தந்து
வருங்காலம் அனைத்தும் செல்வம் வரும் காலம் ஆக்கி வைத்து
பெருமைகள் வழங்க வேண்டும்! பேரருள் கூட்ட வேண்டும்!
அருள்மிகு குருவே உன்னை அடி பணிந்து வணங்குகிறேன்!


வருடம் ஒரு ராசி வீதம் வட்டமாய் சுழன்று வந்தே
தருகிற பலனை நாங்கள் தங்கமாய் ஏற்றுக் கொள்வோம்
வருகிற நாட்கள் எல்லாம் வசந்தமாய் மாறுதற்கே
அருள் தரும் உனது பார்வை அனுதினம் எமக்கு வேண்டும்!

குருவே நீ பார்த்தால் போதும் கோடியாய் நன்மை வந்து சேரும்
திருவருள் இணைந்தால் வாழ்வில் திருமணம் வந்து கூடும்
பொருள்வளம் பெருகும் நாளும் பொன்னான வாழ்வும் சேரும்!
அருள்தர வேண்டி உன்னை அன்போடு துதிக்கின்றோமே!

No comments:

Post a Comment